409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா?

 

இவ்வசனம் (8:25) அல்லாஹ்வின் தண்டனை அநியாயம் செய்தவர்களை மட்டுமின்றி மற்றவர்களையும் தாக்கும் என்று கூறுகிறது.

 

அநியாயம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. அநியாயம் செய்யாதவர்களை இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

 

இந்தச் சந்தேகத்தைத் திருக்குர்ஆன் 7:163-167 வசனங்கள் நீக்குகின்றன. அந்த வசனங்கள் கூறுவது இதுதான்.

 

சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்று கட்டளையிடப்பட்ட சமுதாயத்தினர், மூன்று பிரிவுகளாகப் பிரிந்தனர்.

 

ஒரு பிரிவினர் தடையை மீறி சனிக்கிழமையில் மீன் பிடித்தனர்.

 

மற்றொரு பிரிவினர் இறைவனின் தடையை மீறக் கூடாது எனக் கூறி இயன்ற வரை அவர்களைத் தடுக்க முயன்றனர்.

 

மூன்றாவது பிரிவினர் தடையை மீறி மீன் பிடிக்காவிட்டாலும் மீன் பிடிக்கச் சென்றவர்களைத் தடுக்கவில்லை. மேலும் யார் அவர்களைத் தடுத்தார்களோ அவர்களுக்கு முட்டுக்கட்டையும் போட்டனர்.

 

சனிக்கிழமை மீன் பிடித்துத் தடையை மீறியவர்களை இறைவன் தண்டித்தபோது, தீமையைத் தடுக்காமல் இருந்த மூன்றாவது பிரிவினரையும் தண்டித்தான். தீமையைத் தடுத்தவர்களை மட்டுமே காப்பாற்றினான்.

 

அநியாயம் செய்தவர்கள் மட்டுமின்றி, அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பவர்களும் தண்டனைக்குரியவர்கள் என்ற கருத்தைத்தான் இவ்வசனம் (8:25) கூறுகின்றது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 50716