344. பிறக்கும் போதே நபியா?

 

இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது.

 

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

 

முதல் மனிதரான ஆதம் நபியை இறைவன் படைப்பதற்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக அல்லாஹ் நியமித்து விட்டான் என்பதும், இதனால் அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும் தான் அந்தக் கட்டுக் கதை.

 

பிறக்கும் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகப் பிறந்தார்கள் என்றால் நம்பிக்கை என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது; வேதம் என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது என்று 42:52 வசனத்தில் அல்லாஹ் கூறுவானா?

 

இறைத்தூதராக நியமிக்கப்பட்டவருக்கு ஈமான் இல்லாமல் இருக்குமா? வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இறைத்தூதராக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் நபியாக இருக்கவுமில்லை, தாம் இறைத்தூதராக நியமிக்கப்படுவோம் என்று அறிந்திருக்கவுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

 

இறைச்செய்தி வந்த பிறகு தமக்கு வந்தது இறைச்செய்தி தான் என்பதை ஆரம்பத்தில் அவர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வரகா என்பவர் உறுதி செய்த பிறகுதான் அவர்களுக்கே அது உறுதியானது. (பார்க்க: புகாரி 4, 3392, 4954, 6982)

 

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும், உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்பதும் கட்டுக்கதை என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44564