177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?

 

இவ்வசனத்தில் (7:40) சிலருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

 

இதற்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. வானத்தில் தான் சொர்க்கம் உள்ளது. எனவே தீயவர்கள் அங்கே போக மாட்டார்கள் என்று சில அறிஞர்கள் இதற்கு விளக்கம் கூறுகின்றனர். இவர்களின் இந்த விளக்கம் நிராகரிக்கத்தக்கது.

 

ஏனெனில் சொர்க்கம் மட்டுமின்றி நரகமும் சொர்க்கத்தின் அருகில் தான் உள்ளது. இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் தான் இருக்கும். இதனாலேயே தடுப்புச் சுவர் என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது. இவர்களின் வாதப்படி தீயவர்கள் சொர்க்கத்துக்கு மட்டுமின்றி நரகத்திற்கும் செல்ல மாட்டார்கள் என்ற கருத்து வந்து விடும்.

 

வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

 

"மனிதர்கள் மரணித்தவுடன் அவர்களின் உயிர்களை வானவர்கள் வானுலகிற்கு எடுத்துச் செல்கின்றனர். நல்லவர்களின் உயிர்கள் மிகுந்த நறுமணத்துடன் திகழும். ஒவ்வொரு வானிலும் வானவர்கள் அதனை வரவேற்பார்கள். "எனது இந்த அடியானின் பெயரை இல்லிய்யீனில் பதிவு செய்து பூமிக்கே இவரை எடுத்துச் செல்லுங்கள். அங்கே தான் இவர்களை நான் படைத்தேன்........' என்று இறைவன் கூறுவான். அந்த உயிர் அதற்குரிய உடலுக்குள் செலுத்தப்பட்டு, மண்ணறை விசாரணை நடைபெறும். கெட்டவனின் உயிர் துர்நாற்றம் உடையதாக இருக்கும். வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது அந்த உயிருக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி விட்டு, இவ்வசனத்தை (7:40) ஓதிக் காட்டினார்கள். "இவனது பெயரை பூமியின் ஆழத்தில் உள்ள ஸிஜ்ஜீனில் பதிவு செய்யுங்கள்'' என்று இறைவன் கூறுவான். அவனது உடலுக்குள் அந்த உயிர் செலுத்தப்பட்டு மண்ணறை விசாரணை நடைபெறும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பார்க்க: புகாரி 336, 3094)

 

மேலும் விபரத்திற்கு 434வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 48375