286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?

 

286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே? இவ்வசனங்களில் (58:8,9) "இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?" என்று அல்லாஹ் கேட்கிறான்.

 

இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

 

* இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை செய்யப்பட்டிருந்தது.

 

* இத்தடையைச் சிலர் மீறியதுடன் பாவமான காரியங்களை இரகசியமாகப் பேசினார்கள்.

 

* அறவே இரகசியம் பேசக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டு "கெட்ட காரியங்களை இரகசியம் பேசக்கூடாது; நல்ல காரியங்களை இரகசியம் பேசலாம்'' என்ற கட்டளை இதன் பின்னர் வந்தது,

 

இம்மூன்று செய்திகளையும் மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.

 

"இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் காணவில்லையா?'' என்று திருக்குர்ஆன் கேட்பதிலிருந்து ஏற்கனவே இரகசியம் பேசுவது தடை செய்யப்பட்டிருந்ததை விளங்கலாம். அந்தத் தடையை நீக்கும் இவ்விரு வசனங்கள்தான் குர்ஆனில் உள்ளன. தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.

 

இதில் குழப்பம் ஏற்படத் தேவையில்லை. அல்லாஹ் குர்ஆன் வழியாக மட்டுமே எல்லாத் தடைகளையும் விதிக்கவில்லை. குர்ஆன் அல்லாத இன்னொரு வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் அந்தச் செய்தியைப் போட்டும் தடை செய்வான்.

 

இறைத்தூதர் தடை செய்ததைத்தான் இது குறிக்கின்றது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 48467