475. நோன்பு நோற்பது நல்லது

 

நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

 

நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதை இன்றைய மருத்துவ உலகம் மெய்ப்படுத்துகின்றது.

 

National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்றும், மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் எனும் மறதிநோய், பார்கின்சன் நோய், மற்றும் மூளை தேய்மான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

 

கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயன தூதுகள் எனப்படும் Chemical messengers தூண்டப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

 

The Daily Telegraph' என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது.

 

"உணவைக் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நடத்திய சோதனை மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே இதுவரை நம்பி இருந்தனர். இந்தக் கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும், ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் செய்முறை மூலம் உறுதிப்படுத்தி விட்டனர்.

 

neurosciences ஆய்வக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மார்க் மாட்சொன் இவ்வாறு கூறுகிறார்:

 

"கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும். ஆனால் தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது. இடைவெளி விட்ட விரதம், அதாவது, எல்லா உணவையும் அறவே தவிர்ப்பது, பிறகு தனக்கு வேண்டியதை, தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்" என்று கூறுகிறார்.

 

இந்த ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும்.

 

மற்ற மதத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட நேரத்தைக் கொண்டதாக இருப்பதில்லை. திட உணவுகள் தான் தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான கலோரிகள் கிடைத்து விடும்.

 

சில விரதங்களின்போது சமைக்கப்பட்டதைத் தவிர்த்தால் போதும். பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் பலனை அடைய முடியாது. சில விரதங்களில் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நன்மையை அடைய முடியாது.

 

முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ, சைவமோ, திடமோ, திரவமோ எதுவானாலும் சாப்பிடக் கூடாது. உணவாகக் கருதப்படாத தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும் நீண்ட நேரம் கொண்டதாக இது அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாகப் பெற முடிகிறது.

 

நோன்பை மார்க்கக் கடமையாக்கி இருப்பதும் அது நல்லது என்று சொல்லி இருப்பதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 48534